இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் தனக்கான ஒரு தனி பாதையையும் அடையாளத்தையும் அமைத்து தற்போது இசை உலகின் ராஜாவாக திகழும் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அரசியல், சினிமா, விளையாட்டு என எந்தத் துறையாக இருந்தாலும் அந்த துறைகளின் ஜாம்பவான்களின் வாரிசுகள் தங்களது தந்தைகளின் துறையைத் தேர்ந்தெடுத்தால் அவர்களது நிலைமை மிகவும் கஷ்டம். பல எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் நிச்சயம் அவர்கள் மீது விழும்.
தனது தந்தையின் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் தனக்கான ஒரு தனிப் பெயரை பெறுவது அவ்வளவு எளிதாக நடக்கக் கூடிய காரியமல்ல. ஆனால் அதில் சாதித்துக் காட்டியவர் யுவன் சங்கர் ராஜா.
1997இல் தனது 16 வயதில் அரவிந்தன் படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடக்கத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும் யுவன் துவண்டு போகவில்லை.
1999இல் வசந்த் இயக்கத்தில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக அத்திரைப்படத்தில் வரும் ஹே ராக்கு பின்னணி இசை இன்றும் பலரின் ஃபேவரைட் பிஜிஎம்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் மெலடி பாடல்களை கொட்டிய இவர் இவர் அடுத்து தீனா படத்தில் மாஸ் இசையமைப்பாளராக தன்னை மாற்றிக்கொண்டார். அதன்பின் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் 90ஸ் கிட்ஸ்களின் நெஞ்சில் இடம் பெயர்ந்தார் யுவன். இன்றளவும் பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் இசையமைப்பாளர் என்றால் அது யுவன் தான்.
கோடம்பாக்கத்தில் அட்ரஸ் இல்லாமல் சுற்றித் திரிந்த பல இயக்குநர்களுக்கு இவரது இசைதான் முகவரி. இளையராஜா, ஏ .ஆர் ரஹ்மானுக்கு பிறகு பலதரப்பட்ட இயக்குநர்களுடன் பணிப்புரிந்து அதில் வெற்றியும் கண்டார்.
யுவன் + செல்வராகவன், யுவன் + அமீர், யுவன் + பாலா, யுவன் + வசந்த், யுவன் +ராம், யுவன் + விஷ்ணுவர்தன், யுவன் + லுங்குசாமி, யுவன் + வெங்கட் பிரபு என அந்த பட்டியல் நீளும்.
அதேசமயம் நா முத்துக்குமார், யுகபாரதி, பழனி பாரதி, சினேகன், பா விஜய், வாலி, கங்கை அமரன், தாமரை, வைரமுத்து, கார்த்திக் நேத்தா என பல பாடலாசிரியர்களுடனும் இணைந்து வெற்றிக் கண்டுள்ளார்.
அதிலும் யுவன், முத்துக்குமாரின் காம்பினேஷன் பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரைட் ஆகும். இவர்களது காம்போவில் உருவான இசை ரசிகர்களுக்கு ஒருவித சந்தோஷம் துக்கம் சோகம் என அனைத்து உணர்ச்சிகளையும் தந்தது.
இவரது குரலில் உள்ள பாடல்களை கேட்டால் நமக்கே ஒரு வித போதையை தரும். அவரது குரலில் ஈரப்பதம் உள்ளது. நான் அவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகன் என்றார் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்
இவர்களது காம்போ கோலிவுட்டில் பல ஆண்டுகள் ஆட்டித் படைத்தன. இன்றும் ரசிகர்களின் மனதில் ஆட்டி படைத்து வருகின்றன. பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் இவர் இளையராஜாவின் இளைய ராஜா தான். பிஜிஎம்மின் கிங் என்றும் அழைக்கப்படுகிறார்.
காதல், கமேர்ஷியல், ஸ்டைல், கிராமத்து கதை என எந்த மாதிரியான ஜானர்இளுக்கும் இசையமைக்க கூடியவர் யுவன். 23 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தனது இசையால் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் யுவனுக்கு பல மாஸ் ஹீரோக்களுக்கு நிகரான அளவில் ரசிகர்கள் உள்ளனர். இன்றும் இவரது இசைதான் பலருக்கு தாலாட்டு. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்களது மத்தியில் யுவன் இன்றும் தனித்து தெரிகிறார்.
நடிகர் தனுஷ் கூறியதைப் போல தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து கிட்டத்தட்ட 22 ஆண்டுகளில் எதிரில் இருக்கும் பெயர் மாறிக்கொண்டே இருக்கும், ஆனால் யுவனின் பெயர் நிரந்தரமாக இருக்கும் என்றார். அது உண்மையும் கூட.
பில்லா 2 திரைப்படத்தில் நா. முத்துக்குமாரின் வரியில் தன்னை தானே செதுக்கியவன் என்ற பாடல் அஜித்துக்கு மட்டும் அல்ல யுவன் சங்கர் ராஜாவின் இசை வாழ்விற்கும் பொருந்தும். இசையுலகின் ராஜாவான யுவன் சங்கர் ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.