சென்னை அருகே பனையூர் இல்லத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து உலா வரும் செய்திகள் தமிழத்திற்கு புதிதல்ல. தமிழகத்தை ஆண்ட ஆளுமை மிக்க முதலமைச்சர்கள் திரைத்துறையில் இருந்து வந்ததே, இதற்கு அச்சாணியாக திகழ்கிறது. தமிழகத்தில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் விஜய் மற்றும் அஜித்.
கமல் கட்சி தொடங்கிவிட்டார். ரஜினி எப்படியும் தொடங்கிவிடுவார் என அவரது ரடிகர்கள் ‘டை’ அடித்துக் கொண்டு காத்தி கிடக்கின்றனர். அஜித்தோ பொது நிகழ்ச்சிகளே தவிர்ப்பவர். அவரும் அரசியலும் இணை கோடுகளை போல் எப்போதுமே ஒட்டாது என கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் அடுத்து இருப்பவர் விஜய்தான்.
விஜய் அவ்வப்போது, தனது படங்களிலும், மேடை பேச்சுகளிலும் அரசியலை தொடுவதுண்டு. இருப்பினும், அவரது அரசியல் நிலைப்பாடு அனைவரையும் குழப்பி வருகிறது. ஆரம்பத்தில் திமுகவை ஆதரித்த அவர், திமுகவிடம் இருந்தே நெருக்கடி வர, அதிமுகவுக்கு ஜம்ப் அடித்தார். இடையில் பிரதமரையும் சந்தித்தார்.
ஜிஎஸ்டி, இலவசங்களுக்கு எதிராக தனது படங்களில் விமர்சனங்களை முன் வைத்தார். மேலும், ரசிகர் மன்றங்களை எல்லாம் ஒருங்கிணைத்து விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கி, கொடி அறிமுகம் செய்து அதை விஜய் வழிநடத்தியும் வருகிறார். இந்த நடவடிக்கைகள் எல்லாம் அரசியல் கட்சிக்கான அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், இன்றுவரை அரசியலுக்கு வருவேன், வர மாட்டேன் என விஜய் வெளிப்படையாக வாய் திறந்ததில்லை. அதேசமயம், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி பேசுவதை நிறுத்தியதில்லை. அவ்வப்போது, இது தொடர்பான கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளார்.
அண்மையில், குஷ்புவை தொடர்ந்து, எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியானது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜகவில் இணையப்போகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என்று கூறி அதிரடி காட்டினார்.
இந்தநிலையில், சென்னை அருகே பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியினர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.இதேபோல், மகாராஷ்டிராவை சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விஜய் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதனால், விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரடிகர்கள் மத்தியில் நம்பப்படுகிறது.