நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளை தீபாவளிக்கு பிறகு நடத்திட வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்பிரமணிய சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா வைரஸால் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளது. இப்பெருந்தொற்று காரணமாக நாட்டில் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) எழுதி வேண்டும் என்பது மாணவர்களின் தலைவிதி. பல்வேறு மாநிலங்களின் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் இருந்தபோதிலும் கடந்த கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு மத்திய அரசால் நடைபெற்று வருகிறது.

கரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஜே.இ.இ முதன்மை தேர்வும் செப்டம்பர் 1 முதல் ஆறாம் தேதி வரை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த சூழலில் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தேர்வுகள் மீண்டும் ஒருமுறை தள்ளி வைக்கப்பட்டதால் மாணவர்களின் ஒரு வருடம் வீணாகிவிடும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைகளுக்குப் பிறகு நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளை நடத்திடமாறு பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்ரமணிய சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர், பொதுப் போக்குவரத்து தொடங்கப்படதாக இந்த சூழலில் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு வந்து செல்வது மிகவும் சிரமம். அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள மக்களை தற்கொலைக்கு வழிவகுக்கும்.
இதனால் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளை தீபாவளிக்கு பிறகு நடத்திட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் தயாராகி வந்த கோவையைச் சேர்ந்த 19 வயது மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வு அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நீட், ஜே.இ.இ தேர்வுகள் நடத்துவது குறித்த இறுதி முடிவை மத்திய அரசு நாளை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சுப்பிரமணிய சுவாமியின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு தேர்வுகளை தள்ளி வைக்குமா அல்லது திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Attachments area