பகவான் ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும் அயோத்தி எனும் இடம் நேபாளத்தில் தான் உள்ளது என்ற புதிய சர்ச்சையை அந்நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கிளப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு உத்தரகண்ட் மாநிலம் தார்ச்சுலா மற்றும் இந்திய நேபாள எல்லைப் பகுதியான லிபுலேக் இடையே கட்டப்பட்ட 80 கி.மீ.சாலை தான் முக்கிய காரணம். இந்த வழித்தடம் நேபாள எல்லையைக் கடப்பதாகக் கூறி அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்திய எல்லை பகுதிக்குள் தான் சாலை அமைக்கப்பட்டிருப்பது பற்றி விளக்கம் அளித்தும் அதனை ஏற்க நேபாள அரசு மறுத்து விட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா ஆகிய எல்லைப் பகுதிகளை தனது நாட்டு எல்லையுடன் சேர்த்து வரைபடம் ஒன்றை வெளியிட்டது.இதற்கு அடுத்தபடியாக இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடுகிறது என்று கூறி தூர்தர்ஷனை தவிர்த்து மற்ற அனைத்து சேனல்களையும் தடை செய்தது. இதற்கிடையே சீன வைரஸை விட இந்திய வைரஸ் விட கொடியது, இந்தியாவால் தான் நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கே.பி.ஷர்மா ஓலி முன்வைத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது, ராமர் இந்தியர் அல்ல நேபாளி. நேபாளத்தின் பார்ஸா மாவட்டத்தில் உள்ள பிர்குஞ் நகரில் தான் அயோத்தி உள்ளது. என்று கே.பி.ஷர்மா ஓலி கூறினார். மேலும், நேபாளத்தின் கலாச்சாரத்தை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் இடம் உண்மையான அயோத்தி இல்லை என்று கூறியிருக்கிறார். நேபாளத்தில் நேற்று பானு ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் இல்லத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நேபாள் முன்னாள் இணை பிரதமர் கமல் தாபா, “இதுபோன்ற ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத கருத்துகள் பிரதமரிடமிருந்து வருவது சரியல்ல என்றும் நெருக்கடியான நிலையை போக்குவதற்கு பதில் நேபாள-இந்தியா உறவில் மேலும் விரிசல்களை ஏற்படுத்த பிரதமர் முயற்சிப்பதாக தெரிகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு எம்பி ரவிகுமார், “சீனா ராணுவ ரீதியாக நெருக்கடி கொடுத்தால் நேபாளம் பண்பாட்டு ரீதியாக நெருக்கடி கொடுக்கிறது” என்று தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேபாள பிரதமர் அரசில் இருக்கும் ஆளும் கட்சியினரே அவருக்கு எதிராக குரல் எழுப்பி வரும் அவல நிலை ஒலிக்கு ஏற்பட்டுள்ள சூழலில் அவர் மதவாத அரசியலை கையலெடுத்து தனது ஆட்சிக் கட்டிலை காப்பற்றிக் கொள்ள முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.