பீகார் தேர்தல் வேறு, தமிழகத்தின் அரசியல் களம் வேறு என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாகவே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகவும் மோசமானதாக உள்ளது. 2 மக்களவை தேர்தல்கள், பீகார் உள்ளிட்ட அடுத்தடுத்த மாநில சட்டமன்ற தேர்தல்கள் என தொடர் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி கரைந்து வருகிறது.
இதனால், உள் அமைப்புகளை காங்கிரஸ் விரைவில் மறுசீரமைப்பு செய்துக் கொள்ளாவிட்டால், அதன் முடிவை யாராலும் தடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. பீகார் மாநில சொதப்பல்கள், வரவிருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில தேர்தல்களில் பிரதிபலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ்,” திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கண்டறிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது.
இதை யதார்த்தமாக நடைமுறை கோணத்தில் அணுகுகிறோம். தொகுதிவாரியாக அனைத்தையும் ஆராய்கிறோம். கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். பீகார் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமானதாக அமையவில்லை. தமிழகத்தின் அரசியல் களம் வேறு. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை போல் தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் போட்டியிடுவோம்.
பீகாரில் மக்களவை தேர்தலில் எங்கள் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. மக்களின் ஆதரவை கூட்டணி பெற்றது. அதேபோன்ற மக்கள் ஆதரவு இனியும் தொடரும்.
சட்டப்பேரவை தேர்தலில் கடும் போட்டி நிலவும் சுமார் 100 தொகுதிகளில் திமுகவுக்கு காங்கிரஸால் உதவ முடியும். யதார்த்தத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீடு நடைபெறும். வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம் தொகுதி பங்கீடு நடக்கும். தேவையற்ற பேரங்கள் இருக்காது.” என்று கூறினார்.
2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. போட்டியிட்ட 41 தொகுதிகளில் வெறும் 8ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2019 மக்களவை தேர்தலில் தென் மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் கட்சி மோசமாக தோற்று போனது.
ஆனால், மக்களவை தேர்தல் களம் வேறு, சட்டப்பேரவை தேர்தல் களம் வேறு. மக்களவை தேர்தலில் நிலவிய மோடி எதிர்ப்பு அலை, தற்போது இருக்காது. ஒரு ஆளுமையாக உருவெடுக்க, 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். இதனால், காங்கிரஸுடன் பேரங்கள் இல்லா கூட்டணி அமையுமா என்பது கேள்விக்குறியே.