பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை அதிகளவில் நீல சட்டைகளை பயன்படுத்தி வருகிறார்.
தமிழக ஆண் அரசியல்வாதிகள் என்றால், அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது வெள்ளை வேட்டி, சட்டைதான். இந்த டிரஸ் கோடை வெகு சிலரே உடைக்கின்றனர். அதில், ஒருவராக உலா வருபவர் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை. இவர், பெரும்பாலும் நீல நிற சட்டையை அணிந்து வருகிறார்.
தற்போது நாட்டில் பல பிரச்சனைகள் உள்ள நிலையில், யார் எந்த நிறத்தில் உடை அணிந்தால் என்ன? அதில் என்ன முக்கியதுவம் இருக்கிறது? என்ற கேள்வி எழலாம். ஆனால், அண்ணாமலை சாதாரணமான ஆளும் இல்லை. அவரது கட்சி லேசு பட்டதும் இல்லை.
வட மாநிலங்களை ஆட்டி படைக்கும் பாஜக, தமிழகத்தில் காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கட்சிக்குள் இணைக்கப்பட்டவர் தான் அண்ணாமலை. சேர்ந்தவுடன் அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவியும் கிடைத்தது.
இந்த சூழலில், தமிழக பாஜகவின் முக்கிய நபரான அண்ணாமலை, ஒரு நிறத்தை தூக்கி பிடிக்கிறார் என்றால், அதை வெறும் விருப்ப நிறம் என்ற அடிப்படையில் கடந்துவிட முடியாது. அப்படி அவர் அதிகம் பயன்படுத்தும் நிறம் நீலம். நீலம் என்பது, தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிறம்.
தேசிய அளவில், நீலம் தலித்துகளின் எழுச்சி நிறமாக பார்க்கப்படுகிறது. நீலம் எப்படி தலித்துகளின் நிறமாக மாறியது என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. நீலம் என்பது வானத்தின் நிறம். பரந்த வானத்தின் கீழ் அனைவரும் சமமே. பாகுபாடு இல்லாத வானத்தை பிரதிபலிப்பதால், தலித்துகள் நீல நிறத்தை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. மற்றொரு காரணம், அம்பேத்கர் கட்சி கொடியும், அவர் பெரும்பாலும் அணிந்திருந்த கோட்டின் நிறமும் நீலமே.
சரி, இதற்கும், அண்ணாமலைக்கும் என்ன தொடர்பு? பொதுவாக உயர்சாதியினர் மட்டுமே பாஜகவின் வாக்கு வங்கியாக பார்க்கப்பட்டனர். இதை வட மாநிலங்களில் பாஜக மாற்றி எழுதி வருகிறது. ஒரு தலித் தலைவரை நாட்டின் குடியரசு தலைவராக அமர வைத்தது முதல், அம்பேத்கரை கொண்டாடுவது வரை பல நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திராவிட கட்சிகளே தயங்கும் ஒரு விஷயத்தை பாஜக செய்தது. தலித்தான எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக அறிவித்தது. இந்தநிலையில், தலித் மற்றும் அம்பேத்கரியவாதிகளை குறிவைக்கும் வகையில், அண்ணாமலை நீல நிற சட்டையை அணிகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சர்வதேச அரங்கில் நீலம் என்பது நீல காலர் வேலைகளை செய்யும் உழைக்கும் வர்க்கத்தை குறிக்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் மற்றொரு நிறமான சிவப்பை பாஜகவால் கையில் எடுக்க முடியாது. ஏன்னென்றால் அது பாஜகவின் நேர் எதிர் சித்தாந்தமான கம்யூனிசத்தின் நிறம். இதன் காரணமாக, நீலத்தை அண்ணாமலை அரவணைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பெரியாரின் கருப்பு சட்டை மூதல் கம்யூனிஸ்டுகளின் சிவப்பு சட்டை வரை அனைத்தையும் தமிழகம் பார்த்திருகிறது, ஆதரித்திருக்கிறது. இந்த சூழலில், அண்ணாமலைக்கு நீல சட்டை கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.