ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் நிகழ்ந்த அரசியல் நாடகங்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் இணைந்தேன், அமைச்சர் பதவியை ஏற்றேன் என்றெல்லாம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். அப்போதே, அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்று ஓ.பி.எஸ் அணியில் இருந்த மைத்ரேயன் தெரிவித்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் அதிமுகவில் அதே நிலைதான் நீடிக்கிறது.
முதலமைச்சர் யார் என்ற சர்ச்சை, கட்சி நியமனங்களில் புறக்கணிப்பு, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பதில் முரண்பாடு என ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையிலான மோதல் நாளுக்கு நாள் எரிமலை போல் கொதித்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், கடந்த வாரம் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில், ’’ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்” , “நிரந்தர முதல்வர் எடப்பாடி” என தொண்டர்கள் மாறி மாறி முழக்கமிட்டனர்.
அதிமுகவிற்குள் இப்படி பல சர்ச்சைகள் உலா வந்து கொண்டிருக்க, சசிகலா விடுதலை விவகாரம் பல அமைச்சர்கள் மத்தியிலுமே கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 20ம் தேதி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி சென்றார். சசிகலா விடுதலை தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க அவர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பயணத்தில் அவர் பாஜக தலைவர்களை சந்தித்ததாகவும், அதிமுக-சசிகலா இணைப்பு குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு முன் பலவீனமான அதிமுகவை விரும்பிய பாஜக, தற்போது அதே அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என விரும்புவதாக சொல்லப்படுகிறது. வலுவான அதிமுகவால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்ற நிலைபாட்டிற்கு பாஜக வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பல சர்ச்சைகளுக்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம் முன்னதாக ஒரு சமரச டுவீட் பதிவிட்டிருந்தார். அதில், “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதில், “தாய் வழி” என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மேலோட்டமாக குறிப்பிட்டாலும் தற்போதை சூழ்நிலை குறித்து பார்க்கையில் தாய் வழி என்றால் சின்னம்மா வழி என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தி இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை காட்டிலும், பன்னீர்செல்வம் செய்தது குறைவானதாகவே பார்க்கப்படுகிறது. இதனால், ஓ.பி.எஸுடன் இணைவதில் சசிகலாவுக்கு பிரச்சனை இல்லை என்றும், கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் புறக்கணிக்கப்படும் ஓ.பி.எஸும் இதையே விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதில், சாதி ரீதியிலான ஒற்றுமையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், தேர்தலுக்கு முன் இன்னும் பல வேஷங்களும், நாடகங்களும் தமிழக மக்களுக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.