இஸ்தான்புல்லில் உள்ள பிரபல ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்ற துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டுள்ளார். ஹாகியா சோபியாவை மதச்சார்பற்ற அருங்காட்சியகமாக மாற்றியது சட்டவிரோதமானது என துருக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்த சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவை எர்டோகன் வெளியிட்டுள்ளார். இந்த மதச்சார்பற்ற அருங்காட்சியகத்தை மசூதியாக மாற்றுவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.
ஹாகியா சோபியாவின் வரலாறு:
1500 ஆண்டுகளுக்கு முன், பைசண்டைன் என்று அழைக்கப்படும் கிழக்கு ரோம பேரரசின் ஓர் அங்கமாக இருந்தது துருக்கி. 6ம் நூற்றாண்டில் பைசண்டைன் சாம்ராஜ்ய மன்னரான முதலாம் ஜஸ்டினியன் இஸ்தான்புல்லில் ஹாகியா சோபியா என்ற தேவாலயத்தை கட்டினார்.
1453ல் ஓட்டோமான் பேரரசு நிகழ்த்திய படையெடுப்பின் போது பைசண்டைன் சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்தது. அப்போது, காண்ஸ்டாண்டிநோபுளில் (தற்போதைய இஸ்தான்புல்) உள்ள ஹாகியா சோபியா தேவாலயத்தை ஓட்டோமான்கள் கைப்பற்றினர். ஹாகியா சோபியாவின் கட்டடக்கலை அழகை கண்டு மெய் மறந்துபோன ஓட்டோமான் மன்னர் மெகமுது, தேவாலயத்தை மசூதியாக மாற்றி திட்டமிட்டார். தேவாலயத்தில் இருந்த கிறிஸ்தவ சின்னங்கள், அடையாளங்கள் அழிக்கப்பட்டன. சில மூடி மறைக்கப்பட்டன. ஓட்டோமான் அரசரின் விருப்பத்திற்கு இணங்க சுமார் 900 ஆண்டுகள் தேவாலயமாக இருந்த ஹாகியா சோபியா, மசூதியாக உருவம் பெற்றது.
துருக்கியின் நாகரீக தந்தை:
முதலாம் உலக போரில் ஓட்டோமான் பேரரசு இடம்பெற்றிருந்த மைய சக்திகள் (Central Powers) தோல்வியை தழுவின. இதனைத்தொடர்ந்து, ஓட்டோமான் பேரரசை, நேச நாடுகளான (Allied Powers) பிரிட்டன், ஃபிரான்ஸ், இத்தாலி கூறுபோட்டு ஆக்கிரமித்தன. இதற்கு எதிரான வெடித்த சுதந்திர போராட்டத்தில் முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் தலைமையில் துருக்கியர்கள் வெற்றி பெற்றனர். அதன்படி, 1923ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி துருக்கி சுதந்திரம் பெற்றது. சுதந்திர துருக்கியின் முதல் அதிபராக கெமால் அத்தாதுர்க் பொறுப்பேற்றார்.
துருக்கியை ஐரோப்பிய நாடாக மாற்ற போராடினர். இஸ்லாமிய கலீஃபாவை ஒழித்து, மதச்சார்பின்மையை ஊக்குவித்தார். கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தம் செய்தார். 1935ம் ஆண்டில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் போற்றப்படும் ஹாகியா சோபியாயை சமய சார்பற்ற அருங்காட்சியகமாக துருக்கியின் அதிபர் கெமால் மாற்றினார். தொடர்ந்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியமிக்க களமாக ஹாபியா சோபியா அங்கீகரிக்கப்பட்டது.
வலதுசாரி அதிபரின் மதவாத அரசியல்:
2002ம் ஆண்டில், அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாய சீர்திருத்த வாக்குறுதியை அடிப்படையாக கொண்டு எர்டோகன் ஆட்சி கட்டிலில் ஏறினார். சிரியா, லிபியா போர் தொடர்பான வெளியுறவு கொள்கை , பொருளாதார மந்தநிலையில், வளர்ச்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் எர்டோகனின் புகழ் கணிசமாக குறைந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு, துருக்கியின் முக்கிய நகரங்களான இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எர்டோகன் கட்சி தோல்வியை தழுவியது.
இதுமட்டும் இன்றி, அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடான துருக்கி, அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்நோக்கி உள்ளது. சிரியா விவகாரத்தில் ரஷ்யாவும் துருக்கியும் வெவ்வேறு அணிகளில் உள்ளன. இதனால், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் செல்வாக்கை இழந்து வரும் எர்டோகன், தற்போது புதிய யுக்தியை எடுத்துள்ளார். மதவாக அரசியலை கையில் எடுத்து, இஸ்லாமிய நாடுகளை அணி சேர்த்து வருகிறார்.
மதச்சார்பின்மையை சீர்குலைத்து, இஸ்லாமிய கலீபாவை புத்துயிரூட்ட திட்டமிட்டுள்ளார். தன்னை தானே கலீபாவாக முடிசூட்டிக் கொண்டு, உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தலைவராக தயாராகி வருகிறார். இந்தநிலையில் தான், அயோத்தியை போல் இரு சமயத்தார் உரிமை கொண்டாடும் ஹாகியா சோபியாவை மசூதியாக மாற்ற எர்டோகன் உத்தரவிட்டுள்ளார்.