பீகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, தமிழகத்திலும் தடம் பதிக்க ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி திட்டமிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மாநில கட்சிதான் ஏ.ஐ.எம்.ஐ.எம். இதன் தலைவரான ஓவைசி, ஐதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினாரக உள்ளார்.
மக்களவையில் 2 உறுப்பினர்களை கொண்ட இந்த கட்சி, தற்போது, தெலங்கானா மாநிலத்தை தாண்டி, நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. மேலும், கட்சியை தேசிய கட்சியாக மாற்ற ஓவைசி தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 2 இடங்களில் வென்றது. சமீபத்தில், பீகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிட்ட 20 இடங்களில், 5ல் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், அங்கு தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைப்பதை தடுத்தது. இதனால், ஓவைசி தனித்து போட்டியிடுவது, பாஜகவிற்கு சாதகமாக அமைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தநிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, தமிழகத்திலும் தடம் பதிக்க ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்த அக்கட்சியின் மாநில தலைவர் வக்கீல் அகமது, “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 25 – 30 தொகுதிகளில் போட்டியிடும். கூட்டணி அமைப்பது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் பேசி வருகிறேன். ஆனால், அவர் தரப்பில் இருந்து பதில் வரவில்லை.
இஸ்லாமிய இளைஞர்களின் செல்வாக்கு எங்களுக்கு உள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, மதுரை, புக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். தேர்தலில் தோற்றால், திமுக எங்கள் மேல் பழி போடக்கூடாது. பாஜக எங்கள் எதிரி. அதேசமயம், காங்கிரஸ் எங்கள் முதுகில் குத்துகின்றனர்.” என்று கூறினார்.
திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இருப்பதால், புது கட்சிகளை இணைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தமிழகத்தில் இல்லை என்பதால், அங்கு கிடைக்கும் ஆதரவு ஓவைசிக்கு இங்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே இங்கு இருக்கும் இஸ்லாமிய கட்சிகள் இடம்பெறும் கூட்டணிக்கே பெரும்பாலான இஸ்லாமியர்கள் வாக்களிப்பது, குறிப்பிடத்தக்கது.