பாடகர்களுக்கான மூன்றெழுத்து மந்திரம் எஸ்பிபி. 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது குரல் வளத்தால் இந்தியாவை கட்டுக்குள் வைத்தவர். எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜித், தனுஷ் சிம்பு என சினிமா உலகில் நான்கு தலைமுறை கடந்த சகாப்தம்.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் பிறந்த எஸ்பிபி ஆரம்பக் கட்டத்தில் பொறியியல் பட்டதாரி ஆகவேண்டும் என்றே ஆசைக் கொண்டு பொறியியல் கல்லூரியிலும் சேர்ந்துள்ளார். காலமும் நேரமும்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பார்கள், அப்படி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவுடன் எஸ்பிபிக்கு டைபாய்டு காய்ச்சல் தொற்று வந்தது. வேறுவழியின்றி கல்லூரியில் இருந்து விலகினார்.
எஸ்பிபி தந்தை இசைக் கலைஞர் என்பதால், இவர் பள்ளியில் படிக்கும் போதே பாட்டுப்பாடி பல பரிசுகளை வென்றுள்ளார். இருப்பினும் தன் திறமை தனக்கே தெரியாமல், கல்லூரியில் இருந்து விலகி விட்டோம் என்ன செய்வது என்று தெரியாமல் வந்தாரை வாழ வைக்கும் சென்னையை நோக்கி பயணம் செய்துள்ளார்.
முன்னதாக கூறியது போல் காலமும் நேரமும் எஸ்பிபியின் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் சரியாக அமைத்துள்ளது. யார் கண்டால் அதற்கே எஸ்பிபி குரல் ஒலிக்க கேட்க வேண்டும் என்று ஆசையோ?. சென்னை வந்த எஸ்பிபி, தெலுங்கு பாட்டுப்போட்டி நிகழ்ச்சி ஒன்றை கண்டுள்ளார். சரி இதில் பங்கேற்கலாம் என்று மேடையேறி பாடியுள்ளார். ஆரம்பமே வெற்றிதான் இவருக்கு அந்த நிகழ்ச்சியில் முதல் பரிசு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி, எஸ்பிபியை அழைத்து உங்களுக்கு குரல் வளம் நன்றாக உள்ளது, நல்லா பாடுறீங்க சினிமாக்கு டிரை பண்ணுங்க எனச் சொல்ல, சினிமா வாய்ப்புக்கான கதவை தட்டத் தொடங்கினார்.
அனைவருக்கும் ஏற்படும் நிலைதான் எஸ்பிபிக்கும், அவ்வளவு எளிதாக சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் எஸ்.ஜானகி முக்கியமான ஒரு வார்த்தையை எஸ்பிபியிடம் குறிப்பிட்டிருந்தார். அது வாய்ப்பு தேடி வராது நாம்தான் தேட வேண்டும் தேடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்று. இந்த வார்த்தையை பற்றிக் கொண்டு விடாமல் வாய்ப்பை தேடி அழைந்தார்.
எஸ்பி கோதண்டபானியின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ரமணா படத்தில் தெலுங்கு பாடல் பாட முதல் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் குரலுக்கு பாட எஸ்பிபிக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் மீண்டும் டைபாய்ட் காய்ச்சல். துவண்டு போன எஸ்பிபி வாய்ப்பை தவறவிட்டோமே என கலங்கியுள்ளார். அவரது குரல்தான் இந்த பாடலுக்கு வேண்டும் என்று காத்திருந்த எம்ஜிஆர் எஸ்பிபிக்கு காய்ச்சல் குணமானதும் கார் அனுப்பி வரவழைத்து அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலாவே வா பாடலை பாட வைத்தார்.
முதல் பாடலே வெற்றிதான். கர்நாட்டிக சங்கீதம் தெரியாது, ராகம் தெரியாது. இருப்பினும் படிப்பின் மூலம் கற்றுக் கொள்ளாத பாடத்தை பயிற்சியின் மூலம் கற்றுக் கொண்டார். தொடர்ந்து இளையராஜா இசையில் பல பாடல்களை பாடினார். இளையராஜா எஸ்பிபி கூட்டணி குறித்து நமக்கு தெரியாதா என்ன. ரசிகர்களின் மனதில் கோயில்கட்டி வாழும் கூட்டணி.
வாய்ப்பு தேடுங்க உங்களுக்கு கிடைக்கும் என்று ஊக்கமளித்த எஸ்.ஜானகியுடன் மெல்லிசை கூட்டணி. இருவரும் பாடும் பாடல்கள் அந்த கால காதல் ஜோடிகளின் கனவாக இருந்தது. தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ஒரே நாளில் 21 பாடல்கள் வரை பாடியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார், உலக நாயகன் இருவரின் குரலாக திகழத் தொடங்கினார். தெலுங்கு திரையுலகில் ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு டப்பிங் வாய்ஸ் இவர்தான். ஓபனிங் பாடலுக்கு புகழ் பெற்றவர் ரஜினிகாந்த். இந்த பெறுமையை ரஜினிக்கு அளித்தவர் எஸ்பிபி.
பாடல்கள் பாடிக் கொண்டிருந்த காலத்தில் நடிப்பை உணர்ந்து கொள்ளாமல் எப்படி கதாநாயகனுக்கு குரல் கொடுப்பது எனத் தோன்றி நடிப்பிலும் தடம் பதித்ததார். திருடா திருடா, காதலன், மின்சார கனவு என பல படங்களில் நடித்துள்ளார். சிகரம் என்ற படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார், இந்த படத்தின் கதாநாயகனும் இவர்தான்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற தங்கத்தாமரை மகளே என்ற பாடலை பாடிய எஸ்பிபிக்கு தேசிய விருது கிடைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்ற மொழிகளில் பாடி 6 தேசிய விருதை வென்றுள்ளார். 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். அதற்கு கின்னஸ் சாதனை என்பது மிகையல்ல.
துக்கம் இன்பம் என்ற எந்த சூழ்நிலையிலும் இவரது பாடலை கேட்டால் மெய்மறந்து அவருடன் நாமும் பாடத் தொடங்கிவிடுவோம். இவரது இறப்பில் வாடித் தவிக்கும் இந்த சூழ்நிலையிலும் காதில் ஒலித்து ஆறுதல் தழுவிச் செல்கிறது தலைக்கனமில்லா குரலோனின் குரல்.