நாட்டில் நிகழும் கொடூர குற்றச்சம்பவங்களின் போதெல்லாம், உடனடி நீதி, உட்சபட்ச தண்டனைக்கு ஆதரவாக மக்கள் குரல் ஓங்குகிறது. பெரும்பான்மை அழுத்தத்தின் காரணமாக, ஆட்சி தலைவர்களும், போலீஸாரும் முறையான விசாரணை, நீதிக்கு அப்பாற்பட்ட உடனடி என்கவுண்டர்களையே விரும்புகின்றனர். இந்த ஷூட் அவுட்களுக்கு மலர்தூவியும், பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்கள் ஆரவாரமாக ஆதரவு தெரிவிக்கின்றனர். இதற்கு ஐதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் நடைபெற்ற என்கவுண்டரை உதாரணமாக சொல்லலாம். இந்தநிலையில், நாட்டியை அதிர வைத்த பிரபல ரவுடி விகாஸ் துபே நேற்று உத்தரப்பிரதேசத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் விகாஸ் துபே. கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடை இவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் ஆண்ட, ஆளும், ஆள விரும்பும் பல அரசியல் கட்சிகளுடன் விகாஸுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஜூலை 2 நள்ளிரவில், இந்த குழு விகாஸின் சொந்த கிராமமான உத்தரப்பிரதேசத்தின் பிகருவுக்கு அனுப்பப்பட்டது. காவல்துறையில் இருந்த கருப்பு ஆடுகள் மூலம் இந்த தகவலை அறிந்த விகாஸ், அவரை பிடிக்க வந்த தனிப்படை மீது தனது ஆதரவாளர்களை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒரு டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் உயிரிழந்தனர்.
இது கொடூர தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், விகாஸை பிடிக்க 25 குழுக்கள் உருவாக்கப்பட்டன. மாவட்ட, மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. பிகரு கிராமத்தில் உள்ள விகாஸின் வீடு இடிக்கப்பட்டது. அவரது வாகனங்கள் போலீஸாரால் சேதப்படுத்தப்பட்டது. இதனிடையே, விகாஸின் நெருக்கமான கூட்டாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். வழக்கில் திடீர் திருப்பமாக, ஜூலை 7ம் தேதியன்று அரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஹோட்டலில் விகாஸ் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், போலீஸார் அங்கு செல்வதற்கு முன் விகாஸ் தப்பிவிட்டார். இதன் தொடர்ச்சியாக மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள கோயிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேசத்தில் இருந்து கான்பூர் வரும் வழியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தநிலையில், இவரது என்கவுண்டரில் பல கேள்விகள் எழுகின்றன.
1. கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸ், அவரது கிராமத்தில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும் தப்பித்தது எப்படி?
2. வடமாநில போலீஸாரின் கண்களில் மண் தூவி, மாநிலம் விட்டு மாநிலம் விகாஸ் சுலபமாக ஊடுறுவியது எப்படி?
3. போலீஸ் வலையில் இருந்த விகாஸ் ஆசுவாசமாக கோயிலில் சாமி தரிசனம் செய்தது ஏன்?
4. உஜ்ஜைனில் இருந்து விகாஸ் வாகனத்தை பின் தொடர்ந்த ஊடகங்களின் வாகனத்தை, நடுவழியில் தடுத்து நிறுத்தியது ஏன்?
5. வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், செய்வதறியாது திசைத்துபோன காவலர்கள் துப்பாக்கியை பறிகொடுத்த போது, விகாஸ் மட்டும் துரிதமாக செயல்பட்டு ஆயுதத்தை கைப்பற்றியது எப்படி?
6. தப்பியோடிய விகாஸின் பின்புறங்களுக்கு பதில், மார்பகத்தில் குண்டுகள் பாய்ந்தது எப்படி?
7. விகாஸால் சுடப்பட்ட குண்டுகள் போலீஸாருக்கு பெரிய காயங்களை ஏற்படுத்தாமல், உராய்ந்து சென்றது எப்படி?
எட்டு போலீஸாரை கொன்ற விகாஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், சட்டங்களின் அடிப்படையில், இருதரப்பு நியாயங்களை கேட்ட பிறகு நீதி அரசர்கள் வழங்கும் தீர்ப்பின் படி தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். சட்டங்களும், நீதிமன்றமும் புறக்கணிக்கப்படும் போது, நாட்டில் ஜனநாயகம் சாயும், சர்வாதிகாரம் ஓங்கும் என்பதே நிதர்சனம்.