இதுவரையில் அளித்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 19.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக எடுத்துக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். அத்துடன் இணைத்து, கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து தனது கடைசி போட்டி வரை களத்தில் உடன் ஆடிய வீரர்களுடனான புகைப்படங்கள் அடங்கிய ஞாபக வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
சில விஷயங்கள் நமக்கு புரிந்தாலும் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோலத்தான் தோனியின் இந்த முடிவும். அவரது இந்த முடிவு எதிர்பார்த்தது ஒன்றாக இருந்தாலும், அதை ரசிகர்களால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்திய அணிக்காக அவர் விளையாடிய போட்டிகள், மின்னல் வேக ஸ்டம்பிங், கேப்டனாக மூன்று உலகக் கோப்பையை வென்றது உள்ளிட்ட ஏராளமான தருணங்கள் ரசிகர்களின் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தோனி ( Dhoni ) குறித்து பேச ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதில் முக்கியமாக பார்க்கவேண்டியது அவரது பின்புலம் தான். இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் பெரும்பாலும் வளர்ந்த மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் ஏராளம்.
அப்படி இருக்கையில் பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டின் அதுவும் பெயர் அறியாத ராஞ்சியில் (அப்போது பிகார்) இருந்து வந்து தனது திறமையால் உலகமே கொண்டாடும் அளவிற்கு தோனி வளர்ந்துள்ளார்.
இதன் மூலம் அவர் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான், திறமையானவர்களாக நீங்கள் இருந்தால், எந்த குக்கிராமத்தில் இருந்து வந்திருந்தாலும் உங்களால் உலகையே ஆட்டிப் படைக்க முடியும் என்பதே.
பொதுவாக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் என்றாலே அணியின் மறைமுக துணை கேப்டன். அதேசமயம் விக்கெட் கீப்பர் ஆல் ரவுண்டரும் கூட!
ஸ்டெம்புக்கு பின்னால் நின்றுகொண்டு ஆட்டத்தில் நிகழும் மாற்றங்களை துல்லியமான கோணத்தில் விக்கெட் கீப்பர் போல் வேறு யாராலும் பார்க்க முடியாது. எதிரணியின் பேட்ஸ்மேன்களின் ஃபுட் ஒர்க்கை கூர்ந்து கவனிப்பது, அவர்களுக்கு ஏற்றவாறு பீலிங் செட் செய்வது உள்ளிட்ட பணிகள் எப்போதும் விக்கெட் கீப்பருக்குத்தான் இருக்கும்.
90களின் இறுதிக் காலக்கட்டத்தில். சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் இந்திய அணி தவித்து வந்தது.
ஆனால் நயன் மொங்கியாவிற்கு பிறகு அணியில் எம்எஸ்கே பிரசாத், சபா கரிம், விஜய் தாஹியா, சமீர் திஹே, தீப் தாஸ் குப்தா, அஜய் ரத்ரா, ஆகியோர் விக்கெட் கீப்பராக ஜொலிக்க முடியவில்லை.
இந்த சூழலில் ராகுல் டிராவிட் தன்னை விக்கெட் கீப்பராக மாறி, பேட்டிங், விக்கெட் கீப்பிங் இரண்டிலும் அசத்தினார். ஆனால் அவரால் விக்கெட் கீப்பிங் நிரந்தர தீர்வாக இருக்க முடியவில்லை. அவருக்குப் பிறகு பார்த்தீவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விக்கெட் கீப்பிங்கில் ஜோலித்தாலும், பேட்ஸ்மேனாக தங்களை நிரூபித்துக் காட்ட முடியவில்லை.
இந்த சூழலில் கங்குலியின் கேப்டன்ஷிப்பில் 2005இல் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக நுழைந்த தோனி, குறுகிய காலகட்டத்திலேயே தனது அதிரடியான ஆட்டத்தை நாள் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
விக்கெட் கீப்பராகவும், நல்ல ஃபினிஷராக இருந்த அவருக்கு 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டன்ஷிப் பதவி வழங்கப்பட்டது. கங்குலி உருவாக்கித் தந்த அணியை வேறு தளத்திற்கு கொண்டு சென்று கோப்பைகளால் அலங்கரித்தார் அவர்.
தனது கேப்டன்ஷிப்பால் 2007 டி20 உலக கோப்பை, 2008ஆஸி.யில் சிபி தொடர் வெற்றி, 2011 உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் அரங்கில் இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு சென்றது உள்ளிட்ட பல சாதனைகளை படைத்தார்.
அதேசமயம் அவரது கேப்டன்ஷிப்பின் கீழ் இந்திய அணி பல தோல்விகளும் சந்தித்துள்ளது. வெற்றி பெறுவதை காட்டிலும் தோல்வி அடையும் நேரங்களில்தான் ஒரு கேப்டனின் செயல்பாடுகளை மதிப்பிட முடியும். அந்தவகையில் அணியின் தெரிவித்து தோனி எப்போதும் முதல் நபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.
அதேசமயம் அணி வெற்றி பெற்றால் இது அணியின் வெற்றி என்று கூறிவிட்டு கோப்பையை இளம் வீரருக்கு வழங்கி ஓரமாக நின்று கொள்வார். அவரைப் பொறுத்தவரை வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஒரே மனநிலையில் தான் இருப்பார்.
வெற்றிகளை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு கொண்டாடியதும் இல்லை; தோல்விகளால் துவண்டு போனதும் இல்லை. இந்தியாவில் கிரிக்கெட்டை மதமாக பார்க்கப்படுவதில் அவர் இதை விளையாட்டாகவே பார்த்தார்.
இவர் அளவிற்கு மற்ற வீரர்கள் அதிக விமர்சனங்களை சந்தித்து இருப்பார்களா என்பது கேள்விக்குறி தான். ஆனால் அதனை தனது மெளனத்தினால் கடந்து வந்தார்.
2014 டெஸ்ட், 2017இல் ஒருநாள் கேப்டன்ஷிப்பைத் தொடர்ந்து தனது 16 வருட சர்வதேச கிரிக்கெட்டுக்கு சத்தமே இல்லாமல் ஓய்வு பெற்றுள்ளார் இந்த ஜாம்பவான்.
இந்திய அணியின் கேப்டனாகவும் வீரராகவும் இருந்தபோது அணியில் பல இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை ஊக்குவித்துள்ளார். அந்த பணி இனியும் தொடரும். இது தோனியின் சகாப்தத்தின் முடிவல்ல, புதிய அத்தியாயத்தின் தொடக்கமே.
[…] இது முடிவல்ல புதிய அத்தியாயத்தின் தொ… […]