கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் 100 நாட்களுக்கு பின்னர் இங்கிலாந்து மிகத் துணிச்சலுடன் கிரிக்கெட் விளையாட்டை நடத்த திட்டமிட்டது. அதன்படி இன்று இங்கிலாந்தின் செளதாம்ப்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர் இந்திய நேர நிலவரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடர் இன்று முதல் ஜூலை 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கொரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சிரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த தொடர் காலி மைதானத்தில் நடைபெற விருக்கிறது. அதே சமையம் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் கரகோஷ ஒலி இசையை ஆங்காங்கே நிறுவத் திட்டமிட்டிருக்கின்றனர். மைதானத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றியே போட்டி நடைபெற உள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் போட்டி நடைபெறுவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் அணியினர் இங்கிலாந்து மான்செஸ்டருக்கு வந்தடைந்தனர். அதன் பின்னர் தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் தங்களது பயிற்சியை மேற்கொண்டனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற இனவெறி தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’என்ற வாசகத்தை தங்களது ஜெர்சியில் பதித்துள்ளனர். அதே போல் இங்கிலாந்து அணி தங்கள் நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை தங்களது ஜெர்சியில் பதித்துள்ளனர்.
ஜான் ஹோல்டர் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்குகிறது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தன்னுடைய மனைவியின் பிரசவம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக ஆல் ரவுன்டர் பென் ஸ்ட்ரோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வென்று கோப்பையை யார் கைப்பற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த நியூ நார்மல் சூழலில் நடைபெறவிருக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரை எதிர் நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.