தமிழர்களின் பாராம்பரிய உணவுகள் பல வகை எத்தனையோ இருந்தாலும், நம் உணர்வோடு கலந்த ஒன்றாகிவிட்டது பிரியாணி. ஆம் இன்னும் கொஞ்ச நாளில் போனால் நம் உடலில் ரத்ததிற்கு பதில் பிரியாணிதான் ஓடும். அந்த அளவுக்கு நம்மோடு கலந்து விட்டது என்று சொன்னால் மிகையில்லை. பிரியாணி என்பது ஒரு உணவில்லை ஒரு உணர்வு, அதாங்க ஒரு எமோஷன்.
அப்படி கிராமங்களில் கிடா வெட்டு நிகழ்வில் கூட பிரியாணி இடம் பெறும் அளவுக்கு அது தமிழர்களின் எல்லா மட்டங்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான். ட்ரீட் என்றதும் எங்க பிரியாணி டேஸ்டியாக கிடைக்கும் என்றே தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி சுவைப்பதும் பிரியாணியைதான். நகரங்களில் வீதிகள் தோறும் தெருவிளக்கு உண்டோ இல்லையோ, ஒரு பிரியாணிக் கடை இருப்பது கண்கூடு. சரி கதைக்கு வருவோம்.
பிரியாணி உருவான வரலாறு:
பிரியாணியின் வரலாற்றை பற்றி ஆராய்ந்தால் அது நம்மை கி.பி 2-ஆம் நூற்றாண்டுக்கு இழுத்து செல்கிறது. சங்க இலக்கியங்களில் பிரியாணியின் வரலாற்றுச் சுவடுகள் தென்படுகின்றன. பிரியாணி சமைக்கப்படும் அதே செயல்முறையில் பண்டைய தமிழர்கள் ஒரு உணவைத் தயாரித்து உண்டு வந்திருக்கின்றனர். அதன் பெயர் ‘ஊன்சோறு’.
அப்படி பிரியாணியை பற்றி மதுரைக்காஞ்சி வரிகள் வர்ணிக்கின்றன.
அவை..
‘துடித்தோட்கை துடுப்பாக
ஆடுற்ற ஊன்சோறு
நெறியறிந்த கடிவாலுவன்’
வாலுவன் என்றால் சமையல் செய்பவர் என்று பொருள். அப்படிப்பட்ட சமையல்காரன் உண்பவர்களின் வரிசையை அறிந்து, தேவையை அறிந்து, தன் கைகளையே அகப்பையாகக் கொண்டு ஊன்சோற்றைத் துழாவி எடுத்துத் தந்தான் என்கிறது இந்த மதுரைக்காஞ்சி பாடல்.
இது போன்று இந்த பிரியாணி போன்ற ஊன்சோற்றை பற்றி விவரிக்கின்றன.
பிரியாணி என்ற வார்த்தையின் மூலம் இன்றைய ஈரானான பெர்சியா என்ற மொழியிலிருந்து வந்த உருதுசொல் என நம்பப்படுகிறது. பார்சி மொழியில் ‘பிரியான்’ என்றால் வறுத்த அல்லது வறுக்கப்பட்ட உணவு என்று பொருள்படுகிறது. இருப்பினும் பிரியாணியின் மூலம் பெர்சியாவா அல்லது அரபியேவா என்ற வரலாற்று விவாதம் இன்றும் தொடர்ந்தபடியே இருக்கிறது.
மங்கோலிய பேரரசர் தைமூர் இந்தியாவின் மீது 1398 ஆம் ஆண்டு படையெடுத்து வந்தார். அப்போது போர் வீரர்களுக்காக பிரத்தியேகமாக சமைக்கப்பட்டது தான் இந்தப் பிரியாணி என்ற ஒரு வரலாற்றுத் தகவலும் உண்டு. இதற்கு இணையாக, உலகம் முழுவதும் கடல் மார்க்கத்தில் வணிகத்தில் ஈடுபட்டு வந்த அரேபியர்கள் கேரளா மாநிலம் கொச்சிக்கு வந்த போது பிரியாணி சமைத்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் மூலமும் பிரியாணி பரவி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஒருமுறை போர் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு வருகை தந்த ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் போர் வீரர்களின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தியதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்களாக காணப்பட்டு இருந்தனர். இதனால் அரிசியையும், இறைச்சியையும் சேர்த்து ஒரு உணவாக மும்தாஜ் உருவாக்கியதே பிரியாணி என்ற வரலாற்றுத் தகவல்களும் நம்மிடையே உண்டு. அது பின்னாளில் ஹைதராபாத் நிஜாம்களுக்கும், லக்னோ நவாபுகளுக்கும் பிரியமான உணவாக மாறிப் போனது. பிரியாணி சமைக்கும் சமையல்காரர்கள் உலக புகழ் பெற்றனர். இஸ்லாமியர்களால் தயாரிக்கப்படும் உணவாக அது மாறிப்போனது. அதன் சுவையைப்போலவே சொல்லச் சொல்ல அலுக்காதது பிரியாணியின் வரலாறு.
வடக்கில், இன்றைய லக்னோவான அவாத்தை முகலாயர்கள் சில காலம் ஆண்டனர். அங்கிருந்து அவாதி பிரியாணி என இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. சுவையான பிரியாணி வகைகளில் இது முதன்மையானது. லக்னோ பிரியாணி என்றும் அழைக்கப்படுகிறது. லக்னோ மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பேசப்பட்டு வந்த அவதி என்ற மொழியில் பெயரில் இருந்து மருவி ஆவாதி என்ற பெயர் இந்த வகை பிரியாணிக்கு வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி பிரியாணிக்கு பல வரலாறு இருந்தாலும் , அதற்கான வகைகளும் பல உள்ளது. அப்படி தென்னகத்தில் திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி, வேலூர் ஆம்பூர் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி என வடக்கில் ஜம்மு பிரியாணி வரை பிரியாணி எனும் ஒரு உணவு வகை அனைவரையும் உணர்வுகளால் ஒன்றுப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.