மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை வழங்கும் நிலையில் மத்திய அரசு இல்லை என மத்திய நிதி செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தை பறித்தே 2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி முறையில் பல நன்மைகள் இருந்தாலும், இது நுகர்வு அடிப்படையிலான வரி என்பதால், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற உற்பத்தி மாநிலங்கள் இத்திட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஜிஎஸ்டி திட்டத்தால் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இந்த தொகை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2015-16ம் நிதியாண்டை அடிப்படையாக கொண்டு, 14% வளர்ச்சி விகிதத்திற்கு கீழ் வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இழப்பீடு தொகை பெற சொகுசு பொருட்களின் மீது மத்திய அரசு கூடுதலாக இழப்பீடு செஸ் வரியை விதித்துள்ளது.
ஜிஎஸ்டியில் மூலம் மாதாந்திர வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், பொருளாதார மந்தநிலை காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் திருப்திகரமாக இல்லை. ஒரு புறம் ஜிஎஸ்டி வரி வசூல் போதுமான அளவு இல்லை, மற்றொரு புறம் இழப்பீடு செஸ் மூலம் கிடைக்கும் பணமும் இழப்பீட்டை நிவர்த்தி செய்ய போதவில்லை.
இதனால், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வந்தன. குறிப்பாக, கொரோனா காலத்தில் தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பணமில்லை என கூச்சலிட்டன. இதைத்தொடர்ந்து, மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு சமீபத்தில் விடுவித்தது.
இந்தநிலையில், பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா தலைமையில் நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பீட்டை சரி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை மத்திய அரசு எவ்வாறு செலுத்த போகிறது என்பது தொடர்பாகவும் மத்திய நிதி செயலாளர் அஜய் பூஷண் பாண்டேவுக்கு கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய நிதி செயலாளர் அஜய் பூஷண் பாண்டே, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை வழங்கும் நிலையில் மத்திய அரசு இல்லை என தெரிவித்தார். மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்த விதிமுறைகளை திருத்த ஜிஎஸ்டி சட்டத்தில் இடமிருக்கிறது என்றும், வருவாய் ஒரு சதவீதத்திற்கு கீழ் சென்று விட்டால் மாநிலங்களுக்கு எப்படி பகிர்ந்தளிப்பது என்பதை மறு வரையறை செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.