நறுமணப் பயிராகவும், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள், திரவப் பொருள்களில் பயன்படுத்தும் மூலப்பொருளாகவும் விளங்கும் ‘லெமன் கிராஸ்’ என்னும் எலுமிச்சை புல் சாகுபடி செய்து அதிக லாபத்தை எப்படி ஈட்டலாம் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…!
பொதுவாக புல், செடி, கொடிகள் இருந்தால் கொசுக்கள் வரும். ஆனால், கொசுவை விரட்டும் புல்லாக இருக்கிறது இந்த புல். அதுதான் ‘லெமன் கிராஸ்’ எனப்படும் ‘எலுமிச்சைப் புல்’. இதன் மணம் எலுமிச்சையைப் போன்றே இருக்கும் என்பதால், இந்தப் புல்லில் இருந்து எடுக்கப்படும் லெமன் கிராஸ் எண்ணெய், துணி துவைக்கும் பவுடர், பாத்திரம் துலக்கும் பவுடர், புளோர் கிளீனர், பினாயில் போன்றவற்றுடன் சேர்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி லெமன் டீ தயாரிப்பில் எலுமிச்சை சாறுடன் நறுமணத்துக்காக லெமன் கிராஸ் ஆயிலும் சில இடங்களில் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சைப்புல் கேரளத்தில்தான் அதிகமாக விளைவிக்கப்படுவதால் லெமன் கிராஸ் ஆயிலை கொச்சி வாசனை எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் லெமன் கிராஸ் ஆயில் கொடைக்கானலில் அதிகமாக விற்கப்படுகிறது. இது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். கெமிக்கல் கடைகளில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட லெமன்கிராஸ் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்தப்புல் அதிகம் பயிரிடப்படுகிறது.
ரகங்கள்: ஒடி 19, 408, ஆர்ஆர்எல் – 39, பிரகத், பிரமான, சிபிகே – 25, கிருஷ்ணா மற்றும் காவிரி.
மண் மற்றும் தட்பவெப்பநிலை: வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றில் ஈரப்பதம் வேண்டும்.
விதை மற்றும் விதைப்பு: ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ / ஹெக்டேர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜூன் – ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம்: நடவு செய்ததும் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். எலுமிச்சை புல்லுக்கு ஏழு முதல் பதினைந்து நாள் இடைவெளியில் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். தேவைப்படும்போது கைக்கிளை எடுக்க வேண்டும்.
அறுவடை: நடவு செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது அறுவடை செய்ய வேண்டும். அறுவடையின்போது புல் மற்றும் புதர்களை தரை மட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணெய் எடுக்க தண்ணீர் (அல்லது) ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்கவேண்டும். எண்ணெய் கிடைக்கும் அளவு 0.2 – 0.3 சதவீதம்.
மகசூல்: ஹெக்டேருக்கு 20 முதல் 30 டன் வரை புல் கிடைக்கும். எண்ணெய் ஹெக்டேருக்கு முதலாமாண்டு 25 கிலோ, இரண்டாமாண்டு 85 முதல் 100 கிலோ கிடைக்கும்.
மேற்சொன்ன அனைத்து வழிமுறைகளை பின்பற்றி எலுமிச்சை புல்லை சாகுபடி செய்தால், நம் கல்லா கட்டுவது நிச்சயமே.