ஈரோடு மாவட்டத்தில் வாரந்தோறும் ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை முழுவதும் இந்த சந்தை செயல்பட்டு வரும். இதற்கு அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். இங்கு மலிவான விலையில் துணிகள் விற்கப்படுவதால் பொதுமக்கள் திரளாகக் கூடுவது வழக்கம். குறிப்பாக ஈரோட்டின் கனி மார்க்கெட் மிகவும் புகழ் பெற்றது. இங்கு நாம் செவ்வாய்க்கிழமைகளில் அதிக கூட்டத்தைக் காணலாம்.
இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களாக ஜவுளி வியாபாரம் முடங்கிக் கிடக்கிறது. பொது போக்குவரத்தும் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் வெளி மாநிலங்களில் இருந்தோ அல்லது உள் மாவட்டங்களிலிருந்தோ வியாபாரம் செய்ய வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 100 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள ஜவுளி சந்தையில் சாதாரணமாக ஒரு நாளைக்கு 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். மழை, வெயில். இங்கு குளிர் காலங்களுக்கு ஏற்றவாறு துணிகள் விற்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் கூடுதல் வியாபாரம் நடைபெற்று 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும்.
ஆனால் தற்போதைய சூழலில் பொதுமக்கள் இன்றி ஜவுளி சந்தைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வேலை இழப்பு, சம்பளக் குறைவு என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் பொது மக்களின் வாங்கும் திறனும் படிப்படியாக சரிந்து வருகிறது. என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வியாபாரிகள் கடையைத் திறந்தாலும் குறைந்த அளவிலேயே வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை நீடித்தால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்து வரும் அவர்கள் ஒரு வேலை பொது போக்குவரத்து மீண்டும் செயல்பட்டால் வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று கூறுகின்றனர்.