இந்தியா- பாகிஸ்தான் மோதல்
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கசப்பான உறவு இன்று, நேற்று தொடங்கியதல்ல. சுதந்திரம், பிரிவினையின் போது தொடங்கிய இந்த மோதலால், இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே 3 பெரிய போர்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோசமான உறவால் இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு போட்டிகளும் கூட போருக்கு இணையாகவே பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த கசப்பான உறவு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, மேலும் சரிவை சந்தித்துள்ளது.
ஆசியாவின் சுவிட்சர்லாந்த் என அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீர்-லடாக் பகுதிகள், இயற்கை எழிலுக்கு மட்டுமின்றி புவியியல் ரீதியாகவும் மிகவும் முக்கியமானது. இதனாலேயே பாகிஸ்தானை போல், சீனாவும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. 1962ம் ஆண்டில் இந்திய – சீன போருக்கு பிறகு, லடாக்கின் வடகிழக்கு உள்ள அக்சய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்தது. இதைத்தொடர்ந்து, 1963ம் ஆண்டில், உலக அரசியல் லாபத்திற்காக தனது கட்டுப்பாட்டில் இருந்த ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை பாகிஸ்தான் சீனாவுக்கு பரிசாக வழங்கியது.
இருமுனை போர்
1960ம் ஆண்டு வரை பாகிஸ்தானை மட்டுமே எதிரி நாடு என நினைத்த இந்தியா, 1962 போருக்கு பிறகு விழித்துக் கொண்டது. ஒரு புறம் பாகிஸ்தான், மற்றொரு புறம் சீனா என இருமுனை போரை எதிர்கொண்டுள்ளோம் என இந்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்குவது, ஐநா உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பது, பாகிஸ்தானில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என பல உதவிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
அதிநவீன போர் கப்பல்
அந்த வகையில், சீனாவின் கப்பல் கட்டுமான வர்த்தக நிறுவனத்திடம் இருந்து இரண்டு அதிநவீன டைப் – 054 பிரிகேட்ஸ் ரக போர் கப்பல்களை வாங்க, பாகிஸ்தான் கடந்த 2017ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தில் மேலும் இரண்டு போர் கப்பல்கள் வழங்கப்படும் என சீனா சார்பில் கடந்த ஆண்டு அறிவிப்பட்டது. இந்தநிலையில், சீனா தயாரித்த முதல் டைப் – 054 பிரிகேட்ஸ் ரக போர் கப்பலின் தொடக்க விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஹூடாங் ஸோன்குவா கப்பல் தளத்தில், நேற்று முன் தினம் நடைபெற்றது.
புதிய அத்தியாயம்
இதனிடையே, அண்மையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சீனாவில் சந்தித்து, முக்கியமான பேச்சுவார்த்தையை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இந்த போர் கப்பலின் தொடக்க விழா நடைபெற்றதால், சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.