126 ரன்கள் அடித்திருந்தாலும் அதை சிறப்பாக ஃடிபெண்ட் செய்து ஹைதராபாத் அணியை வீழ்த்தி தொடர் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!
நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி, மும்பை, பெங்களூரு அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. மீதமுள்ள கடைசி இடத்துக்கு கொல்கத்தா, பஞ்சாப் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் கொல்கத்தா டெல்லியை வீழ்த்தி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் துபாயில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்.
ஏனெனில் இரு அணிகளும் தலா 10 போட்டிகளில் எட்டு புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், ஜிம்மி நீஷம் ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான், மன்தீப் சிங் இடம்பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பூரன் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா, ஹோல்டர், ரஷீத் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின் 127 என்னும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 6.1 ஓவர்களில் 56 ரன்களை எடுத்தது வலுவான நிலையில் இருந்தது. வார்னர் பேர்ஸ்டோ இருவரும் செட் பேட்ஸ்மேனாக இருந்தனர். இந்த சூழலில், வார்னர் 35 ரன்களுடன் பிஷ்னாய் பந்துவீச்சில் காலியாக, அடுத்து முருகன் அஸ்வின் ஓவரில் பேர்ஸ்டோவும் 19 ரன்களுக்கு வெளியேறினார். ஆட்டத்தின் திருப்புமுனையாக இந்த விக்கெட் அமைந்தது. அதன் பின் நான்காவது வரிசையில் இறங்கிய அபூல் சமாத் ஏழு ரன்களில் நடையைக் கட்ட, மனீஷ் பாண்டே – விஜய் சங்கர் ஜோடி அணியை கரைசேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஜோடி 33 ரன்கள் சேர்த்த நிலையில் 29 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த மனீஷ் பாண்டே அவுட் ஆனார். மறுபக்கம் பொறுப்பாக ஆடி வந்த விஜய் சங்கர் 14 பந்துகளில் 17 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் விஜய் சங்கர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்த போட்டியும் பஞ்சாப் அணியின் பவுலர்கள் கையில் செல்ல ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பஞ்சாப் அணி தரப்பில் ஜார்டான், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.கிட்டத்தட்ட கடைசி 13 பந்துகளில் ஆறு விக்கெட்டுகள் இழந்து மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தொடர் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.